23.4.06

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...

ஆரம்ப கட்ட கருத்துக் கணிப்புகளால் மக்களின் மனநிலையை தெளிவாகக் கூறமுடியவில்லை. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த அ.இ.அ.தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு சரிசமமான பலத்துடன் உருவெடுத்துள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சமாதான மற்றும் சலுகை நடவடிக்கைகளினால் அ.இ.அ.தி.மு.க. தான் இழந்த வாக்குகளை மீண்டும் பெற்றுள்ளது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. சலுகைகள் மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தந்து விடுமா? நான்கு ஆண்டுகள் நசுக்கிவிட்டு ஐந்தாவது ஆண்டில் சலுகைகள் கொடுத்தால் போதும் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற தவறான முன்னுதாரணம் ஏற்படுவது சரியா? அது ஒரு புறம் இருக்கட்டும். அ.இ.அ.தி.மு.க. வுக்கு ஆதரவான இந்த மாற்றம் சலுகைகளினால் மட்டும் ஏற்பட்டதல்ல என்பதை உணர்ந்து கொள்ள கடந்த கால தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்குத் தோல்வியைத் தந்த மக்கள் ஆறு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றி வைத்து அழகு பார்த்தார்கள் என்பது வரலாறு. அதை விட்டு விடலாம் ஏனென்றால் அங்கு எம்.ஜி.ஆர். என்ற தனிப் பெரும் சக்தி இருந்தது. ஆகையால் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து மட்டும் பார்ப்பது தான் இன்றைய சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

1989 சட்டமன்றத் தேர்தல்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1989 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. இரண்டாக உடைந்து ஜெ.அணி, ஜா. அணி என தேர்தலைச் சந்த்தித்தது. முக்கியமாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப் பட்டது. சேவல் சின்னமும், இரட்டைப் புறா சின்னமும் அவர்களுக்கு வழங்கப் பட்டன. இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. உடைந்ததும் இரட்டை இலை முடக்கப் பட்டதும் தான் தி.மு.க. வின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டன. ஆக 1989ல் தனது சொந்த செல்வாக்கில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பது கண்கூடு.

1991 சட்டமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க. மீண்டும் ஓர் அணியாக உருப் பெற்றது. இரட்டை இலை மீண்டும் சின்னமானது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. ஆக இந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தன்னுடைய சொந்த செல்வாக்கில் ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பதும் கண்கூடு.

1996 சட்டமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. வளர்ப்பு மகன் திருமணம், ஜெ அரசின் ஆடம்பரங்கள்,
ஜெயலலிதாவின் ஆணவம், எதிர்ப்பவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை இவையெல்லாம் பர்கூரில் ஜெயலலிதாவையே தோற்கடித்தன. தி.மு.க- த.மா.கா. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரான மக்களின் மன நிலையே வெற்றியை நிர்ணயித்ததால் இந்தத் தேர்தலிலும் தி.மு.க. சொந்த செல்வாக்கில் வென்றதாகக் கொள்ள முடியாது. இந்தத் தேர்தலில் எதிரணியின் வெற்றிக்குக் காரணமே ஜெ தான் என்று சொல்பவர்களும் உண்டு.

2001 சட்டமன்றத் தேர்தல்

மிகவும் முக்கியமான தேர்தல் இது. அடுக்கடுக்கான ஊழல் வழக்குகளில் சிக்கி ஜெயலலிதாவும் அவரது சகாக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். டான்சி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகள் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிக் கொண்டிருந்தது. 1996 முதல் 2001 வரையிலான கலைஞரின் ஆட்சி மீது மக்களூக்கு பெரிய அதிருப்தியும் இருக்கவில்லை. இந்த நிலையில் தேர்தல் வருகிறது. தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. வெறும் கூட்டணி பலத்தால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்பது சிலரது கருத்து.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் இதுவரை வாக்களித்ததாகத் தெரியவில்லை. 1989 திலும், 1996 ரிலும் தனது ஆதரவு வாக்குகளால் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கவில்லை. மாறாக அ.இ.அ.தி.மு.கவுக்கு எதிரான எதிர் ஓட்டுகளால் (negative votes) மட்டுமே ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் இப்போது நடைபெற இருக்கும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வுக்கு எதிரான எதிர் ஓட்டுகள் (negative votes) கணிசமாக கிடைக்கும் வாய்ப்பு இல்லை. எனவே தன்னுடைய சொந்த செல்வாக்கை சோதித்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது தி.மு.க. எந்தவித அலையும் இல்லாத சூழலில் அ.இ.அ.தி.மு.க. வை விடுத்து தி.மு.க. வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மக்களிடம் தயக்கமில்லை என்பதை தி.மு.க. நிரூபிக்க வேண்டியுள்ளது.

2001ல் கூட்டணி பலத்தால் தான் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றது சொந்த செல்வாக்கால் அல்ல என்பதும் இந்த தேர்தலில் சோதனைக்கு உள்ளாகிறது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. வுக்கு ஆதரவாக இதுவரை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதே இந்தப் பதிவின் மையக் கருத்து. அதுவும் இந்த தேர்தலில் சோதனைக்கு உள்ளாகிறது.

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டிய அவசியம் தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. பல கேள்விகளுக்கு மே 11ம் தேதி விடை கிடைக்கும்.

3.4.06

கலைஞர் வழங்கும் கலர் டி.வி.

ஊரெல்லாம் ஒரே பேச்சு. கலைஞர் கலர் டி.வி. குடுக்குறார்னு. சரி. என்னடானு விவரம் பாக்கலாம்னுட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையை வாங்கி படிச்சுப் பாத்தா... பக்கத்துக்குப் பக்கம் வித்தியாசம்தான் போங்க.

பெண்கள் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ள இலவச கலர் டி.வி.

இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. ( எல்லா ரேஷன் கார்டுக்கும்)

மத்திய அரசு அமைக்க உள்ள ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனே அமல்படுத்துவோம்.

இதையெல்லாம் படித்துவிட்டு சரி MANIFESTO என்ற வார்த்தைக்கு அகராதியில் என்ன அர்த்தம் உள்ளது பார்ப்போம் என்று புரட்டிக் கொண்டே வந்தேன். நடுவில் DESPERATE என்ற வார்த்தை கண்ணை உறுத்த எட்டிப் பார்த்தால் கருணாநிதி என்று அர்த்தம் போட்டிருக்கிறது.

அ.தி.மு.க. விற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் தாக்கமும் தேர்தலில் தி.மு.க. விற்கு பெரிய சவாலாக உள்ளன. பெண்களைக் கவர ஒரு திட்டம் வேண்டும். என்ன செய்யலாம். கலர் டிவி குடுத்தா லேடீஸ் ஓட்ட கவர் பண்ணிரலாம்னு அறிவு பூர்வமா அறிவாலயத்துல நடைபெற்ற ஆலோசனையின் பயன்தான் கலர் டிவி அறிவிப்பு.

தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு மானியங்களை அறவே ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையோ அதற்கு எதிராகப் பேசுகிறது. கூட்டணீயில் உள்ள மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தில் இதை எப்படி ஞாயப் படுத்துகிறார் என்று பார்க்கலாம். ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற கவர்ச்சிக் கோஷம் 67ல் கைகொடுத்தைப் போல் இப்போதும் அரிசி அரசியல் கை கொடுக்கும் என்று நினைக்கிறார் கலைஞர்.

அடுத்து ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை. ஐந்தாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால் தான் அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என முதல்வராக ஜெயலலிதா பல மேடைகளில் பேசியுள்ளார்.
தொழில் வளத்தைப் பெருக்கி, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்களைச் செயல் படுத்துவதன் மூலமே ஊதியக் குழுவின் பரிந்துரைகள் போன்றவற்றை அமல்படுத்த முடியும். இல்லையெனில் யார் ஆட்சி செய்தாலும் சமூக நலத் திட்டப் பணிகளுக்கான செலவினங்களுக்கு நிதி இருக்காது.

இப்படி வாக்குகளைக் குறி வைத்து தரப்படும் கவர்ச்சியான வாக்குறுதிகள்
அடுத்த ஐந்தாண்டுகள் அரசின் செயல்பாட்டையே நிலை குலைய வைக்கும்.
உண்மைகளையும், தங்கள் சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் வைத்து வாக்குக் கேட்கும் நேர்மை இங்கு யாருக்கும் இல்லை. நீ இலவசமாக அரிசி கொடுத்தால் நான் சமைத்தே கொடுப்பேன் என்னும் நெறி கெட்ட போட்டி தான் இன்று அரசியலின் அரிச்சுவடியாக உள்ளது.

இவற்றோடு சேர்த்து தலைவரின் முதுமையும், தளபதியின் காத்திருப்பும் அணி சேர இம் முறை எப்படியேனும் ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற ஒரு தவிப்பு தி.மு.க வின் ஒவ்வொரு செயலிலும் எதிரொலிக்கிறது. 131 இடங்களில் போட்டியிட்டு 118 இடங்கள் வெல்ல முடியாது என்று தெரிந்தும், வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியோ அல்லது சிறுபான்மை ஆட்சியோ நடத்த வேண்டியிருக்கும் என்ற கட்டாயம் உள்ளது என்பதை உணர்ந்தும் கூட்டணி கட்சிகளுக்கு வாரிக் கொடுத்திருக்கிறது தி.மு.க. காரணம் DESPARATION.

இவைகளுக்கு நடுவே கருணாநிதி என்ற பலமான தலைவரைக் காண முடியவில்லை ஒரு பரிதவிக்கும் தந்தையைத் தான் காண முடிகிறது.

30.3.06

தேர்தலும் தேர்வுகளும்

பள்ளியிறுதித் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் பிரச்சாரம் தொடங்குவது நியாயமா? ஜெயலலிதா 31ம் தேதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பிரச்சாரம் தொடங்குகிறார். வை.கோ. அதே நாளில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்குகிறார். தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளின் பிரச்சாரத் திட்டங்கள் இன்னும் வெளியிடப் படவில்லை.

ஏப்ரல் 10ம் தேதி வரை பள்ளியிறுதித் தேர்வுகள் நடைபெறுகின்றன. 10ம் வகுப்பு அரசுத் தேர்வுகள் 7ம் தேதி தான் நிறைவு பெறுகின்றன. இந்தச் சூழலில் தலைவர்களின் பிரச்சாரக் கூச்சலில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப் படும். தெருவுக்குத் தெரு வாகனங்களில் ஒலி பெருக்கிகளை அலற விட்டபடி இதோ வருகிறார் அதோ வருகிறார் என ரத்தத்தின் ரத்தங்கள் எழுப்பப் போகும் கூக்குரல் மாணவர்களைச் சலனப் படுத்தும். அவர்களின் ஓராண்டு உழைப்பும் வீணாகும்.

மே 8ம் தேதி நடக்க உள்ள வாக்குப் பதிவுக்கு ஏப்ரல் 10ம் தேதிக்குப் பின் பிரச்சாரம் தொடங்கினால் குடிமுழுகிப் போய்விடாது. கட்சிகளின் பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் செவிமடுக்கும் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செய்யும் இந்த தவறை தடுக்க வேண்டாமா? தேர்தல் அட்டவணை வெளியிடும் போதே தேர்வுகள் முடிந்த பின் தான் பிரச்சாரம் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்க வேண்டாமா?

ஏழை சொல் என்றும் அமபலம் ஏறாது!

29.3.06

விஜய்காந்தின் பகல் கனவு!

சினிமாவில் நடிப்பதற்கு எப்படி எந்த அடிப்படைத் தகுதியும் தேவை இல்லையோ அதே போல அரசியலில் ஈடுபடுவதற்கும் கட்சி ஆரம்பிப்பதற்கும் எந்தத் தகுதியும் தேவையில்லை. சரி. போகட்டும்.

முதலில் விஜய்காந்தைப் பாராட்டி விடுவோம். இதோ அதோ என்று கண்ணாமூச்சி விளையாடாமல், தனியாக கட்சியை ஆரம்பித்ததும், மக்கள் முன் சென்று எனக்கு ஆதரவு தாருங்கள் என நேரடியாகக் கேட்பதும் பாராட்டப்பட வேண்டிய விசயங்கள். வாழ்த்துவோம்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம். கட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை விஜய்காந்த்தின் செயல்பாடுகளையும், அறிக்கைகளையும் முக்கிய பிரச்சினைகளில் அவரது கட்சியின் நிலைப்பாட்டையும் கூர்ந்து கவனித்தால் என்ன பிம்பம் தோன்றுகிறது?

களத்தில் இருக்கும் இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன் கட்சியை நிறுவுவதற்கு முயற்சி மேற்கொள்கிறார் கேப்டன். ஆனால் அந்த திராவிடக் கட்சிகளின் கல்யாண குணங்கள் அனனத்தும் தே.மு.தி.க. வில் அப்படியே இருப்பதைக் காண முடிகிறது. தனிநபர் துதி, ஒற்றைப் புள்ளியில் குவிக்கப்படும் அதிகாரம், கழகங்களிலிருந்து காப்பியடிக்கப்படும் பிரச்சார உத்திகள், வேட்பு மனுவிற்கு 5000 ரூபாய் வசூலிப்பது முதல் மேடைகளில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்படுவது வரை அப்படியே கழகங்களின் கார்பன் காப்பிதான் தே.மு.தி.க. சரி. போகட்டும்.

தேர்தல் வந்துவிட்டது. கூட்டணிக் குழப்பங்கள் தொடர்ந்தன. வை.கோ. விசயம் முடிவானதும் கவனம் கேப்டன் பக்கம் திரும்பியது. யாருடனும் கூட்டணி இல்லை தனித்துத்தான் போட்டி என்று அறிவித்து விட்டார் கேப்டன்.
எனக்கு ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள் என்று இப்போது மக்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார் கேப்டன். சரி. இனி விசயத்துக்கு வருவோம்.

போட்டியிடும் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்ற எண்ணத்தை அவருள் விதைத்தது
எந்தக் கதாசிரியர் என்று தெரியவில்லை. கறுப்பு எம்.ஜி.ஆர். என்ற வேஷம்
போட்டுக் கொண்டால் போதும் செயிண்ட்.ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி
விடலாம் என்று திரைக்கதை எழுதிக் கொடுத்தவர் யாரோ தெரியவில்லை.
சரி. போகட்டும்.

பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் கூட தே.மு.தி.க. வை மூன்றாவது இடத்தில் தானே வைத்தன. கூடுகிற கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறாது என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கத்துக் குட்டிகள் கூட அறிந்த விசயம் தானே? நிலைமை இப்படியிருக்க,

எதற்காகத் தனித்துப் போட்டி? ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் படம் சூப்பர் கிட் ஆகி விட்டால் சிம்மாசனம் நிச்சயம் என்ற வர்த்தகக் கண்ணோட்டமே இதில் எஞ்சி நிற்பதாகத் தெரிகிறது.

இரண்டில் ஏதாவது ஒரு அணியுடன் இணைந்து தரப்படும் தொகுதிகளைப் பெற்று சட்டமன்றத்தில் நுழைந்து உங்கள் கொள்கைகளை அங்கு பேசியிருந்தால் மக்கள் உங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள் இல்லையா? கூட்டணி வைத்துக் கொள்வதாலேயே களங்கம் வந்து ஒட்டிக் கொள்ளும் என்று நினைக்க வேண்டியதில்லை.
ஏனென்றால் உங்களுக்குள் வித்தியாசம் எதுவும் இல்லை என்று தான் முடிவாகிவிட்டதே.

ஒரு தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின் ஐந்தாண்டு காலத்துக்கு கட்சியைக் கட்டிக் காப்பதும் தொண்டர்கள் சோர்வடயாமல் காப்பதும்
மிக அவசியம். தேர்தலில் தோற்றால் கேப்டன் டூயட் பாடப் போய்விடுவார்.
தொண்டர்களின் கதி. தே.மு.தி.க. வின் எதிர்காலமே கேள்விக் குறியாகி விடும். கேப்டன் சரியான நேரத்தில் ஒரு தவறான முடிவை எடுத்துள்ளார். பீல்டிங் செய்ய வேண்டிய நேரத்தில் பாட்டிங் செய்ய முடிவெடுக்கும் கேப்டனைப் போல...

வெற்றிக் கோப்பை கிடைக்குமா? அல்லது பகல் கனவாய்ப் போய்விடுமா?
மே 11ம் தேதி விடை கிடைக்கும்.

25.3.06

வாக்குப் பதிவு கட்டாயமாக்கப் பட வேண்டுமா?

வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் தொடங்கியுள்ள விழிப்புணர்வுப் பிரச்சாரம் எனக்குள் எழுப்பிய கேள்விகளின் வெளிப்பாடே இந்தப் பதிவு.

"வாக்குரிமை ஒரு புனிதமான உரிமை. அது நாம் தாய் நாட்டுக்குச் செலுத்த வேண்டிய ஒரு கடினமான பொறுப்பும் கூட. எனவே வாக்குரிமையைப் பயன் படுத்துவது என்பது நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய ஒரு செயலாக வேண்டும். நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்."--குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.

நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் வாக்குப் பதிவு 60 விழுக்காடுகளைச் சுற்றியே வலம் வருகிறது. படித்தவர்களில் பெரும்பாலோரும் மேல்தட்டுக் குடிகள் பெரும்பாலோரும் பொதுவாக வாக்குச் சாவடிகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. படித்தவர்கள் வாக்களித்தால் நல்ல அரசியல் சூழல் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்ற ஏக்கமும் நெடுநாளாக இருந்து வருகிறது.

வாக்குரிமை என்பது குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என அரசியல் சட்டம் கூறுகிறது. அந்த அடிப்படை உரிமையைக் கட்டாயமாக்க முடியுமா? அது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயலில்லையா? யாருக்கும் வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை என்னும் போது நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற வாதத்தை தவறென்று கூறமுடியாது இல்லையா?

Right to dissent? என்பதும் ஒரு தனி மனித உரிமைதானே? ஆனால் தற்போதைய தேர்தல் வழி முறைகளில் Right to dissent? என்பதை பதிவு செய்ய வாய்ப்புள்ளதா? என்று பார்த்தால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.
வாக்குச் சீட்டில் யாருக்கும் வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை என்பதற்கான சின்னமும் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டால் அனைவரையும் வாக்குச் சாவடிக்கு வரச்சொல்லி கட்டாயப் படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும். ( இது தொடர்பான ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத் தக்கது).

தற்போதைய வாக்குச் சீட்டின் அமைப்பில் உள்ள கோளாறுகளுக்கு நல்ல உதாரணங்கள் இரண்டு. இதோ...

ஒன்று. என் நினைவுக்கு எட்டிய வரை ஆர்.வெங்கட்ராமன் தொடங்கி அவருக்குப் பின் வந்த அனைத்து குடியரசுத் தலைவர்களும் தேர்தல்களில் வாக்களிக்கிறார்கள். இதை முதல் குடிமகன் குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது கட்சி சார்பும் அரசியல் சார்பும் இல்லாமல் இருக்க வேண்டிய முதல் குடிமகன் எந்த கட்சிக்கு சார்பாக வாக்களித்தார் என்று முடியைப் பிய்த்துக் கொள்வதா? அவர் சுயேட்சைக்கு வாக்களித்தார் என்று கொண்டால் கூட அதில் ஒரு சார்பு நிலை கற்பிக்கப் படலாம் இல்லையா?


இரண்டு. தேர்தல்களை பாரபட்சம் இல்லாமல் நடத்தும் தேர்தல் ஆணையர்கள் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு சென்றால் அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? யாருக்கு வாக்களித்தாலும் அது அவர் மேல் ஒரு வர்ணத்தைப் பூச வழி வகுக்காதா? அப்படியென்றால் தேர்தல் ஆணையர்கள் வாக்களிக்கவே முடியாதா? அவர்களுக்கு மட்டும் அந்த ஜனநாயக உரிமை மறுக்கப் படுவது சரியா?

யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லாதவர்களும், தங்கள் பதவிகளின் பொருட்டு நடுநிலை வகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களும்
வாக்களிக்க தேவையான அம்சங்கள் வாக்குச் சீட்டில் இடம் பெறாத வரை
வாக்களிக்க வரும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது? அதுவரை வாக்குப் பதிவு விழுக்காடு உயராது என்பது மட்டும் உறுதி.

16.3.06

என் ஜன்னலின் வழியே (தொடர்ச்சி)

சிரமப்படாமல் இதற்கு முந்தைய பதிவைப் படித்து விட்டு வந்தால்தான் மேலும் படிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

தொடர்ச்சி.....

யோசித்தபடியே ஜன்னலைத் திறந்தேன்.

என் கண் முன் பரந்து விரிந்து கிடந்தது திருவள்ளுவர் பூங்கா. அந்த காலை நேரத்திலேயே பூங்கா சுறுசுறுப்பாக இருந்தது. பூங்கா எனக்கு மிக மிகப் பரிச்சயமான இடம். எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட. நேரம் போவது தெரியாமல் பல நாட்கள் பூங்காவில் உலா வந்திருக்கிறேன். நண்பர்களோடு
உரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.

ஆனால் இந்தப் பூங்காவிற்கு வந்து செல்பவர்கள் யார் யார் என்று என்றுமே நான் யோசித்ததில்லை. பூங்காவிற்குப் போனோமா நம்ம வேலையைப் பார்த்தோமா திரும்பி வந்தோமா என்றுதான் இதுவரை இருந்திருக்கிறேன்.

ஆனால் இன்று பூங்காவின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை பார்க்க எழுந்த ஆசையில் இதோ பூங்காவை சுற்றிச் சுற்றி கண்களைச் சுழலவிடுகிறேன். யார் யார் வருகிறார்கள் பார்ப்போமே.....

முதலில் என் கண்கள் பதிந்த இடம் புங்கை மரத்து நிழல். அங்கு ஒரு நடுத்தர வயதான தம்பதி காணப்பட்டார்கள். இவர்களை இப்போதுதான் பார்க்கிறேன். வெகுதூரம் பயணம் செய்து வந்த களைப்பை அவர்கள் முகத்தில் காண முடிந்தது. அந்த அம்மா ஏதோ படிப்பதும் எழுதுவதுமாக இருக்க அந்த ஐயாவோ தலைக்கு வலது கையையை முட்டுக் கொடுத்தபடி சாய்ந்து படுத்திருந்தார். மகிழ்ச்சியும், முதிர்ச்சியும் இருவரின் முகத்திலும் தெரிந்தது. இவர்களைப் போல் பக்குவமும், அனுபவமும், நிதானமும் நிறைந்த
முதிரிளைஞர்கள் பலரை பூங்காவினுள் நான் சந்தித்திருக்கிறேன்.

அவர்களிடமிருந்து பார்வையைத் திருப்பியதும் என் கண்ணில் பட்டது பூங்காவின் மதிற் சுவர். இரண்டடி உசரம் தான் இருக்கும். இதை ஒரு விவாத மேடையென்றே சொல்லலாம். நானும் நண்பர்களும் பூங்காவிற்குள் சென்றால் அமரும் இடம் இதுதான். காரசாரமான பல விவாதங்கள் நடக்கும் இடம் இது. பல நேரங்களில் விவாதங்களை கூர்ந்து கவனிப்பதோடு சிலர் நின்று விடுவர். அதில் நானும் ஒருவன். இப்போது கூட சுவர் மேல் சில நண்பர்கள் அமர்ந்து சீரியஸான விவாதித்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பூங்காவின் இன்னொரு மூலையில் இருந்து வந்த சத்தம் என் கவனத்தை இழுக்க திரும்பிப் பார்த்தால் அங்கு விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கு பெறும் வகையில் அடிக்கடி இதுபோன்ற போட்டிகள் பூங்காவில் நடத்தப் படுகின்றன. யார் யார் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க நான் முற்படுகையில்,

யாரோ உரத்த குரலில் பேசுவது காதில் கேட்க அங்கு போய் நிலைக்கின்றன என் கண்கள். அருமையான வேப்பமரத்து நிழலில் கூடி இருக்கிறது ஒரு கூட்டம். ஓகோ இது ஆன்மீக அரங்கு. பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை லயிப்புடன் அமர்ந்து ஆன்மீக சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து,

"செந்தூரப் பூவே செந்தூரப் பூவே" என இளையராஜாவின் இசை என்னை சுண்டி இழுக்க எட்டிப் பார்த்தால் ரேடியோ பெட்டி நடுவில் பாடிக் கொண்டிருக்க சுற்றியமர்ந்து தலையாட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் சில நண்பர்கள். எனக்கும் இவர்களோடு சேர்ந்து கொள்ள ஆசைதான். நேரம் தான் தடை போடுகிறது.

பிரபலமானவர் ஒருவரை அழைத்து ஒவ்வொரு வாரமும் தினந்தோறும் நடத்தப்படும் கருத்துப் பரிமாற்றம் பூங்காவின் மையப் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்துக்கு இன்றே கடைசி போல அதனால் விடைபெறும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

தடாகத்துக்கு அக்கரையில் அமர்ந்து சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் ஜன்னலில் இருந்து அவர்கள் வெகு தூரத்தில் இருக்கிறார்கள் என்றாலும் பூங்காவினுள் சென்ற பின் அவர்கள் இருக்குமிடம் வரை சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவது என் வழக்கம்.

தன்னைச் சுற்றி குழந்தைகளை அமர வைத்து கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார் ஒரு நண்பர். பூங்காவினுள் அவ்வப்போது கதைகளும், கவிதைகளும் நிறைய உலா வரும் என்றாலும் அதில் குழந்தைகளுக்காக சொல்லப்படும் கதைகள் சிறப்பானவை.

ஆங்காங்கு கிடக்கும் பெஞ்ச்களில் அமர்ந்து சிலர் அன்றாட செய்திகளை வாசித்துக் கொண்டிருக்கின்றனர்.

தனித் தனியாக சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் நிறையப் பேர் பூங்காவிற்குள் இருக்கிறார்கள். அவர்களோடு எனக்கு அதிக அறிமுகம் இல்லாததால் அவர்களை வகைப் படுத்தாமல் விட்டுவிட்டேன். அவர்கள் அனைவரும் வந்து போவதால்தான் திருவள்ளுவர் பூங்காவிற்கு சிறப்பு என்பதும் உண்மை.

சில நேரங்களில் போலியான ஆசாமிகள் சிலர் பூங்காவிற்குள் உலவுவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்ற விளம்பரம் போடப்பட்டுள்ளது.

"ஜன்னலுக்கு வெளிய இவ்ளோ நேரமா அப்பிடி என்னத்தப் பார்த்துட்டு இருக்க டாடி" என்று என் சிந்தனையைக் கலைத்தான் இளைய மகன்.

அவன் தூங்கி எழுந்தாயிற்று. அவன் கேட்பதற்கு முன் அவனுக்கு பதில் சொல்லி விட வேண்டும். இப்போது என்னிடம் தான் பதில் தயாராக இருக்கிறதே!

12.3.06

என் ஜன்னலின் வழியே....

சனிக்கிழமை இரவு மணி11 ஐக் கடந்து விட்டது. நான் தமிழ் மணத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். இப்போதல்லாம் அனேகமாக தினமும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. வேலைகளை முடித்து தூங்கப் போவதற்கு முன் ஒரு எட்டு தமிழ் மணத்தை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாமா? என்று அமர்ந்தால் நேரம் போவதே தெரிவதில்லை.

சனிக்கிழமையும் அப்படித்தான், மணி11 ஐக் கடந்து விட்டது. நான் தமிழ் மணத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே அதி காலையில் எழுந்து என்ன ஆகப் போகிறது. எட்டு எட்டரை மணிக்கு சாவகாசமாக எழுந்தால் போதுமே. நேற்று படிக்கத் தவறிய பதிவுகளை இன்று எப்படியாவது படித்துவிடுவது என்ற முடிவுடன் வந்து அமர்ந்து அரை மணி நேரம் ஓடிவிட்டது. அந்த நேரம் பார்த்து,

"டாடி தூங்க வரலையா" என்று என் இளைய மகன் வந்து நிற்கிறான்.

"நீ போய் படுடா இதோ பத்து நிமிஷத்துல நான் வந்துர்ரேன்" என்கிறேன் சமாதானமாக.

"இப்படித்தான் சொல்லுவ அப்புறம் வரமாட்ட நீ இப்பவே வா" என்று அன்றாட நடப்பை சொல்கிறான்.

"கொஞ்சம் வேலை இருக்குடா கண்ணா முடிச்சுட்டு வந்துர்ரேன்" என்கிறேன் கெஞ்சலாக.

கணினித் திரையை பார்த்த படி "இது என்ன தமிழ் மணம் என்ன பண்ற இதுல" என்று அவனது கவனம் திசை மாற.

"உலகம் பூரா இருக்குற தமிழ் நண்பர்கள்கிட்ட இது மூலமா பேசலாம் எழுதலாம்" என்கிறேன் நான்.

"இதுல சேரணும்னா எவ்வளோ படிச்சிருக்கணும் டாடி யார் யார்ல்லாம் இதுல இருக்காங்க". என்கிறான் ஆவலாக.

"தமிழ் தெரிஞ்ஜா போதும்டா யாரு வேணா எழுதலாம். நிறைய பேரு இருக்காங்க நான் அத எப்படி சொல்றது" என்கிறேன் சற்று குழப்பமாக.

"என்னென்னல்லாம் எழுதுவாங்கன்னு சொல்லேன்" என்கிறான் அவனும் குழப்பமாக.

"அதெப்பத்தியெல்லாம் காலையில விளக்கமா உனக்கு சொல்றேன் நீ இப்ப போய்த் தூங்கு ஓகேயா" என்று சொன்னவுடன் தலையாட்டிவிட்டு நகரும் போது "சீக்கிரமா வந்துடு டாடி" என்று சொல்லிக் கொண்டே நடக்கிறான்.
நான் உடனே வரப் போவதில்லை என்று அவன் புரிந்து கொண்டது போல் தெரிகிறது.

கவனத்தை மீண்டும் வலைக்குள் செலுத்த படிப்பதும் பின்னூட்டமிடுவதுமாக நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. கண்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் நன்றி சொல்லி பின்னூட்டத்தை முடித்து இருக்கையை விட்டு எழந்தேன்.

படுத்தவுடன் கண்களுக்குள் தமிழ் வந்து உட்கார்ந்து கொண்டது. படித்த பதிவுகளும் அடித்த பின்னூட்டங்களும் ஒரு முறை மீள் பார்வைக்கு வந்து சென்றன. அதோடு தொடர்ச்சியாக தமிழ் மணத்தைப் பற்றி காலையில் அவனுக்கு சொல்வதாகச் சொன்னதும் நினைவுக்கு வர என்ன சொல்வது என்று மனது அசை போடுகிறது. யார் யார் இருக்காங்கன்னு கேட்டானே யாருண்ணு சொல்றது. தூக்கம் வந்து கேள்விகளைக் கவ்விக் கொண்டது எப்போது என்று எனக்குத் தெரியாது.

பக்கத்து வீட்டுக் காரரின் பைக் கிளம்பும் சத்தத்தில் முழித்துக் கொண்டேன்.
சுவர்க் கடிகாரம் 9 தைத் தாண்டிக் கொண்டிருந்தது. தலையைத் திருப்பி பார்த்தால் இன்னும் யாரும் முழிக்கவில்லை. அம்மாவை அணைத்தபடி தூங்கும் சின்னவனைப் பார்த்தவுடன் அவன் கேள்வி நினைவுக்கு வந்தது.

அவனுக்கு நிச்சயமாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும். என்னைப் பார்த்தவுடன் அவன் கேட்கும் கேள்வி அதாகத் தான் இருக்கும். பதில் சொல்லும் வரை அவன் என்னை விடப் போவதில்லை.

யோசித்தபடியே ஜன்னலைத் திறந்தேன்.


பதிவின் வரிகள் அதிகமாகி விட்ட படியால் தொடரும் போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

அடுத்த பதிவில் அவனுக்கு பதில் சொல்கிறேன்.